பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகாசன பயிற்சி இன்று உலகம் முழுவதும் படர்ந்துள்ளது. ஆரோக்கியம், மன அமைதி, மகிழ்ச்சியான வாழ்வுக்கு யோகா மிக அவசியம் என்பதை உலகமே உணர்ந்து வருகிறது.
லட்சக்கணக்கான யோகாசன பயிற்சிகள் இருப்பதாக, யோகா ஆசிரியர்கள் கூறுகின்றனர். யோகா என்றதுமே, “உடலை வளைக்க வேண்டும், கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே செய்ய முடியும், நமக்கு செட் ஆகாது” என்று பலரும் நினைக்கின்றனர்.
உண்மையில் யோகா செய்வதற்கு நாம் ஒதுக்க வேண்டியது நேரம் மட்டுமே; நேரத்தை ஒதுக்கினால் மற்ற அனைத்தும் தானாகவே நடைபெறும்.
சரி… எந்தவித பயிற்சியும் தேவையில்லாத மிக எளிய ஐந்து யோகாசன பயிற்சிகளை இங்கு தொகுத்துள்ளோம்.
பத்மாசனம் (Padmasana)

சீராக அமர்ந்து, மனதை ஒரு நிலைப்படுத்துவதே பத்மாசனம் எனப்படும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் செரிமானப் பிரச்சனைகள் சரியாகிறது.
செய்முறை
- தரை, அல்லது விரிப்பின் மீது சீராக அமருங்கள்.
- கால்களை சம்மணமிட்டு அமர்ந்து, முதுகுத்தண்டை நேராக வையுங்கள்.
- கைகளை மடியில் கிடத்தி, மூச்சை ஆழமாக இழுத்து, மெதுவாக வெளியேற்றுங்கள்.
சூர்ய நமஸ்காரம் (Surya Namaskar)

உடல் புத்துணர்ச்சி பெறவும், சூரிய ஆற்றலைப் பெறவும் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த யோகா முழு உடலின் செயல்பாட்டையும் தூண்டுகிறது.
செய்முறை
- 12 யோகாசன நிலைகளைக் கொண்டதே சூர்ய நமஸ்கார ஆசனம் .
- இந்த ஆசனத்தை மெதுவாக மற்றும் ஒருங்கிணைந்த முறையில் செய்ய வேண்டும்.
- பிரணாமாசனா, ஹஸ்தஉட்டனாசனா, ஹஸ்தபடாசனா, அஸ்வ சஞ்சலனாசனா என்ற ஆசனங்கள் இதில் அடங்கும்.
- 8,9 மற்றும் 10வது நிலைகள் மட்டும் பயிற்சி பெறாமல் செய்வது கடினம். ஆனாலும், முயற்சி செய்யலாம்.
- கர்ப்பிணிகள் இந்த யோகாசனத்தை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வஜ்ராசனம் (Vajrasana)

இந்த யோகாசன பயிற்சி செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. மன அழுத்தம், மன சோர்வை அகற்றும். அமர்ந்த நிலையில் செய்யும் ஒரு எளிய யோகா இது.
செய்முறை
- தரையில் முழங்கால்களை ஊன்றி அமர்ந்து கொள்ளுங்கள்.
- முதுகை நேராகவும், தாடையை உயர்த்தியும் வைக்க வேண்டும்.
- புட்டம் உங்கள் பாதங்களில் படும்படி அமர்தல் அவசியம்.
- முழங்கால்களில் அமர்ந்து, முதுகை நேராக வைத்து, கைகளை மடியில் வைக்கவும்.
- சீராக சுவாசிக்கவும்
திரிகோணாசனம் (Trikonasana)

முதுகு மற்றும் தோள்களில் உள்ள தசைகளின் இருக்கத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் ஆசனம் இது. உடல் உறுப்புகளை வலுப்படுத்த இது உதவுகிறது.
செய்முறை
- நின்றவாறு இரு கால்களையும் சற்று அகலமாக விரித்துக்கொள்ளவும்.
- வலது காலை மட்டும் இன்னும் சற்று நீட்டு, உங்கள் வலது கையால் காலின் பாதத்தை தொடுங்கள்.
- இப்பொது இடது கையை மேல் நோக்கி உயர்த்தி இந்த ஆசனத்தை செய்யலாம்.
சவாசனம் (Shavasana)

உடலுக்கு முழுமையான ஓய்வைக் கொடுக்க்கும் மிக மிக எளிய ஆசனம் இது.
செய்முறை:
- பிணத்தைப் போல் படுத்திருக்கும் ஆசனம் இது என்பதால் சவாசனம் எனப்படுகிறது.
- கை, கால்கள், உடலை தளர்த்தி அப்படியே படுத்துக் கொள்ளுங்கள்.
- மூச்சு சீராக இருக்க வேண்டும். உடலுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் தளர்வாக படுக்க வேண்டும்.
இந்த எளிய 5 யோகாசனங்களையும் தொடர்ந்து செய்துவர, உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும் என்பது நிச்சயம்.