இப்படியும் ஏமாற்று வேலை; கோவை மக்களே கவனம்!

கோவை: கோவையில் வாட்ஸ்-ஆப் குழு அமைத்து, ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

ரத்தினபுரியை அடுத்த நாராயணசாமி லே-அவுட்டைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் ராஜசேகர். சகோதரர்களான இவர்கள் இருவரும் WhatsApp குழுவை தொடங்கி அதில் பலரை இணைத்தனர்

கேரளாவில் நடைபெறும் லாட்டரி குலுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு பரிசு அளிப்பதாகவும் அக்குழுவில் பதிவிட்டனர்.

அதனடிப்படையில், பலரும் இருவருக்கும் பணம் அனுப்பி 3ம் நம்பர் லாட்டரியை வாங்கினர். ஆனால், பணம் அனுப்பிய பலருக்கும் பரிசு கிடைக்கவில்லை. பட்டை நாமமே பரிசாகக் கிடைத்தது.

சகோதரர்கள் இருவரும் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துவருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில், போலீசார் அவர்களது வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, ஆன்லைன் லாட்டரி மோசடிக்காக தனியாக செல்போன்களை பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை சுருட்டியது தெரியவந்தது. அவ்வாறு சுருட்டிய பணத்தில் 213 கிராம் நகைகள் வாங்கியதும் தெரியவந்தது.

தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் (NCC) தளமும் தொடர்ச்சியாக கோவையில் நடைபெறும் இது குறித்த செய்திகளை பகிர்ந்து வருகிறது.

இருந்த போதிலும், ஆசைவார்த்தையால் மக்கள் ஏமார்ந்து, பணத்தை இழந்து வாடுவது தொடர்கதையாகி வருகிறது.

விழிப்புடன் இருங்கள். உழைத்தால் வருவாய் நிச்சயம். உழைக்காமல் உயரலாம் என்று நினைத்து முதலீடு செய்பவர்களுக்கு…

கோவிந்தா… கோவிந்தா…

Recent News

Advertisment

Latest Articles