ஈஷா மகா சிவராத்திரி: கலந்து கொள்ளும் அரசியல், தொழில், சினிமா பிரபலங்கள் யார்?

கோவை: ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்த விவரங்களை ஈஷா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஈஷா யோகா மையத்தில் 31-ஆவது மஹாசிவராத்திரி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

அந்த வகையில், ஈஷா மகா சிவராத்திரி விழாவில் ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோட் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பண்ணாரி குழுமத் தலைவர் பாலசுப்ரமணியனம், சோழமண்டல குழுமத் தலைவர் வேலையன் சுப்பையா, அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த சங்கீதா ரெட்டி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.

திரைத்துறை

திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் சந்தானம், தமன்னா, விஜய் வர்மா, திரைப்பட இயக்குனர் ஓம்.பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டவர்களும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா அவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஈஷாவின் வழிக்காட்டுதலில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 24 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகளும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர்.

அதே போன்று ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடியின மக்கள் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இதனுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் நேரில் வந்து விழாவில் பங்கேற்க உள்ளனர். அனைவருக்கும் தேவையான இருக்கை வசதிகள் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரவு முழுக்க இசை

இவ்விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, ‘பாரடாக்ஸ்’ என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் – அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பிரபலமான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

Recent News

Advertisment

Latest Articles