கோவை: கோவையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குளுகுளுவென்று இருந்த கோவை மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெப்பம் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. தினமும், 32 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வருகிறது.
இதனால், பகல் நேரத்தில் வெளியே வரமுடியாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, கோவையின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநகரைப் பொருத்தவரை, காந்திரபும், கணபதி, டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ராமானுஜம் நகர், வெள்ளலூர், வடவள்ளி, சுந்தராபுரம், சாய்பாபா காலனி, சிவானந்தாகாலனி, சரவணம்பட்டி, மருதமலை ஐ.ஓ.பி காலனி, மயிலம்பட்டி, தென்னம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
வாசகர்கள் தெரிவிக்கும் பகுதிகள் உடனுக்குடன் மேலே உள்ள பத்தியில் சேர்க்கப்பட்டு வருகின்றன. உங்கள் பகுதியில் தற்போது மழையா? எங்களுக்கு வாட்ஸ்-ஆப் எண்ணில் (99444 38011) தெரியப்படுத்துங்கள் . கோவை மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கலாம்.