கோவை: கோவை அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர்கள் பாடம் நடத்த மறுப்பதாகக் கூறி, மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஒண்டிப்புதூரில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கணினி ஆசிரியராக பெண் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
அந்த பெண் ஆசிரியை மாணவர்களுக்கு சரிவரப் பாடம் நடத்துவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் செய்முறைத் தேர்வில் பெரும் சிரமத்தைச் சந்திப்பதாகக் கூறி, அப்பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் மாணவர்கள் கூறியிருப்பதாவது:
ஆசிரியை குறித்து பலமுறை பள்ளி முதல்வரிடம் முறையிட்டுள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பள்ளி இப்படித் தான் இயங்கும், வேண்டுமென்றால் படியுங்கள், இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
எந்த பயனும் இல்லை
மேலும், இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலருக்கும் புகார் அனுப்பியும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மாணவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் ஆசிரியை பாடம் நடத்த மறுப்பதால் மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.