கோவை: கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மார்ச் 5ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கோனியம்மன் கோவையில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
உக்கடம் பேரூர் ரோடு, ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்குவீதி, செட்டிவீதி மற்றும சலிவன் வீதி பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பேரூர் ரோடு
(i) பேரூரிலிருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக, நகருக்குள் வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில், வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா, பேரூர பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம்.
(ii) வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சநதிப்பு வழியாக பேரூர் ரோட்டை அடைந்து செல்லலாம்.
மருதமலை, தடாகம்,ரோடு
(i) மருதமலை ரோடு.தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. மாற்றாக, மருதமலை ரோடு தடாகம் சாலையிலிருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்திசாலை, சிவாலயா சந்திப்பு. செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்லலாம்.
(ii) உக்கடத்திலிருந்து, ஒப்பணக்காரவீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை ரோடு. மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும, பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னய்யராஜபுரம், A.K.S.நகர் வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்லலாம்.
(iii) சுக்கிரவார்பேட்டை சாலையிலிருந்து, தியாகிகுமரன் வீதிவழியாக, ராஜ வீதிக்கு, வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.
(iv) கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.
(v) தேர் திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி, K.G.வீதி ஆகிய சாலைகளில் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

வாகன நிறுத்தம்
கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவிற்கு, இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள, ராஜ வீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், கோனியம்மன் கோயில் எதிர்புரம் உள்ள கார் பார்க்கிங் மற்றும் உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவை மாநகர போலீசார் இவ்வாறு அறிவித்துள்ளனர்.