கோவை: கோடைகாலத்தை முன்னிட்டு கோவையில் தண்ணீர் மண் பானை விற்பனை சூடுபிடித்துள்ளது.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தற்போது, குறைந்தது 22 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 33 டிகிரி வரை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
கோவையில் இந்த வாரத்திலேயே, வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சில்லின்னு தண்ணீர்

வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வரும் கோவை மக்கள், மண் பானைகளை வாங்கி, அதில் நீரை நிரப்பி ‘சில்’லென்று பருகி வருகின்றனர். இதனால் கோவையில் மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்தாண்டு மண் பானைகள் பல்வேறு வடிவங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.
கவுண்டம்பாளையம் மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கும் பானைகள் அப்பகுதி சுற்றுவட்டாரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மண் பானைகள் விலை ரூ.100 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
உதவிடுவோம்
நீங்களும் குளுகுளு வென்று தண்ணீர் குடிக்க ஆசைப்பட்டால், கவுண்டம்பாளையம் சென்று தொழிலாளர்களிடம் நேரடியாக பானைகளை வாங்கிக்கொள்ளலாம். உங்கள் உடலும் குளிரும், தொழிலாளர்கள் வயிறும் நிறையும்.